Published : 08 May 2023 05:54 PM
Last Updated : 08 May 2023 05:54 PM

சிறப்பு அதிகாரிகளின் பதவி இறக்கம்: அண்ணாமலைப் பல்கலை. உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை, ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டுவந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நிர்வாக பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்தியது. அதன்பின் கல்வி மையங்களின் எண்ணிக்கை 59 ஆக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலர் உபரி அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் பலரை உதவி பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், அவர்களை வேளாண் துறைக்கும், கல்லூரி கல்வித் துறைக்கும் அயல் பணியாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதுபோன்று 350 சிறப்பு அதிகாரிகளை, அரசு கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமித்து, ஊதியத்தையும் குறைத்துள்ளதாக கூறி, கிருஷ்ணமூர்த்தி உள்பட 115 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுக்களில், தங்களை ஆய்வக உதவியாளர்களாக நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "முதுகலைப் பட்டம் பெற்ற தங்களை, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது. ஏற்கெனவே பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு, அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x