Published : 06 May 2023 03:14 PM
Last Updated : 06 May 2023 03:14 PM

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்குத் தனியாக மாயனம் உள்ளது. ஆனால், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். எனவே, புதைக்கப்பட்ட அவரது கணவரின் உடலைத் தோண்டி எடுத்து, மயானத்தில் புதைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர், "உடல் புதைக்கப்பட்டுள்ள நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல. நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடுதான் உடல் புதைக்கப்பட்டது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும், பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என உத்தரவிட்டார். மேலும், கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தைக் கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் அந்த நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை, உடலைத் தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x