திமுக எம்.பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

கனிமொழி | கோப்புப்படம்
கனிமொழி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர்கள் சந்தானகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கனிமொழி உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறப்பித்த தீர்ப்புக்கும், தேர்தல் மனு மீதான விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில், "வேட்பாளரின் கணவர் சிங்கப்பூர் அல்லது வேறு எந்த நாட்டில் வேலை செய்தாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், அவரின் வருமானத்தை அறிய வாக்காளர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் வேட்பாளர் அதை வழங்கத் தவறியுள்ளார்" என்று வாதிடப்பட்டிருந்தது.

அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "கேட்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வாக்காளர்கள் நான் வேட்புமனுவில் தெரிவித்துள்ள தரவுகளின் அடிப்படையில் எனக்கு வாக்களித்துள்ளனர். எனவே தன் மீதான வழக்கு விசாரணையை தடை செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in