Published : 16 Sep 2017 10:16 AM
Last Updated : 16 Sep 2017 10:16 AM

பேரவைத் தலைவர் 2-வது நாளாக ஆலோசனை: எம்எல்ஏக்கள் 18 பேரின் பதவி தப்புமா?

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர், அரசு தலைமை வழக்கறிஞருடன் பேரவைத் தலைவர் பி.தனபால் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றனர். அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு பேரவைத்தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதில், கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததால், மற்ற 18 பேரும் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இவர்கள் தற்போது கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுடன் வந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், சில ஆவணங்கள் கோரியும், கர்நாடக போலீஸ் பாதுகாப்புடன் எம்எல்ஏக்கள் ஆஜராக அனுமதி கோரியும் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தார்.

இதற்கிடையே, 18 எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பேரவைத் தலைவர், செயலரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ‘எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை தொடங்கிவிட்டது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோருடன் பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று முன்தினம் விரிவாக ஆலோசனை நடத்தினார். 2-வது நாளாக நேற்றும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் பேரவைத் தலைவர் தொடர்ந்து ஆலோசித்தார்.

செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை மேலும் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் விரைவில் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாயும் என்றே தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x