Published : 02 May 2023 07:32 PM
Last Updated : 02 May 2023 07:32 PM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கிறிஸ்துவ மத அடையாள கவரில் விபூதி, குங்குமம் வழங்கல்: 2 சிவாச்சாரியார்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்கும பிரசாதம் வழங்கிய 2 சிவாச்சாரியார்களை 6 மாதம் பணியிடை நீக்கம் செய்து கோயில் இணை ஆணையர் வே.குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மூலவர் மற்றும் அம்மன் கருவறை முன்பு இறைவனை தரிசிக்கும் பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்படுகிறது. இதில், தீபாராதனை தட்டில் பணத்தை போடும் பக்தர்களுக்கு, கவரில் நிரப்பப்பட்ட விபூதி பிரசாதத்தை, சிவாச்சாரியார்கள் வழங்குகின்றனர். விபூதியை நிரப்பும் கவர்களை ஆன்மிக அன்பர்கள் அச்சடித்து வழங்கி வருகின்றனர்.

இந்து முன்னணி முற்றுகை: இந்நிலையில், கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில், பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கி வந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை இன்று (மே 2) முற்றுகையிட்டு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அருண் தலைமையிலான இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், “கிறிஸ்துவ மத அடையாளத்துடன் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டுள்ளன. இதனை கோயில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது. கவர்களை திரும்ப பெற வேண்டும். கவரில் அண்ணாமலையாரின் படத்தை தவிர, வேறு எதுவும் இடம்பெறக் கூடாது. உள்நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அவர்களிடம் கோயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்று வந்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

நிர்வாகத்துக்கு அவப்பெயர்: இதன் எதிரொலியாக 2 சிவாச்சாரியார்கள் மீது, கோயில் இணை ஆணையர் வே.குமரேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உத்தரவில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முறை அர்ச்சகர் கே.சோமநாத குருக்கள், ஸ்தானீகமாக பணியாற்றும் ஏ.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களின் உத்தரவு பெறாமல், நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்க்சைக்குரிய விபூதி, குங்கும பிரசாத கவர்களை, திருக்கோயில் நிர்வாகத்துக்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் மே 1-ம் தேதி பக்தர்களுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர்.

இதையடுத்து திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கும் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், 2 குருக்களையும் 6 மாத காலத்துக்கு பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x