Published : 28 Sep 2017 08:10 AM
Last Updated : 28 Sep 2017 08:10 AM

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? - ஜெ. மரணம் குறித்து விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தர வேண்டும்: விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை ஆணையம் தொடர்பான அரசாணைகளை அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் 25-ம் தேதியிட்ட அரசாணையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்பாராத விதமாக உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையம், 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 27-ம் தேதியிட்ட மற்றொரு அரசாணையில், ‘ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருந்த சூழல், அன்றிலிருந்து டிசம்பர் 5-ம் தேதி அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது வரை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x