Published : 28 Apr 2023 05:42 PM
Last Updated : 28 Apr 2023 05:42 PM

சி.வி.சண்முகம் போலீஸ் பாதுகாப்பு விவகாரம்: தமிழக அரசின் முடிவு ரத்து; ஐகோர்ட் உத்தரவு

சி.வி.சண்முகம் | கோப்புப்படம்

சென்னை: அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அன்று, என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன்பின் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை.

தற்போது 2006-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனு கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் பதிலளிக்கப்படவில்லை என சி.வி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

காவல்துறை தரப்பில், அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மாவட்ட காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. பாதுகாப்பு மறு ஆய்வு குழுவின் முடிவின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த, நீதிபதி ஜி சந்திரசேகரன் பிறப்பித்த உத்தரவில், சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், போலீஸ் பாதுகாப்பு கோரி அவர் அளித்த மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x