Published : 28 Apr 2023 06:14 AM
Last Updated : 28 Apr 2023 06:14 AM

கச்சத்தீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டன - யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தகவல்

கச்சத்தீவில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலைகள்.

ராமேசுவரம்: கச்சத்தீவில் இலங்கை கடற்படை வீரர்கள் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டுவிட்டதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த இலங்கை கடற்படை, ‘கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர்களில் பெரும்பான்மையானோர் பவுத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக சிறிய புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த நிரந்தரக் கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. வேறு எந்த மத வழிப்பாட்டுத் தலமும் இல்லை. எதிர்காலத்தில் புதிதாக புத்த விகாரையை நிர்மாணிக்கும் முயற்சிகளில் கடற்படை ஈடுபடாது என தெரிவித்திருந்தனர்.

இத்தனை ஆண்டு காலமாக கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில், கச்சத்தீவில் பிற மதத்தினரும் ஆலயங்களை நிறுவி வழிபடத் தொடங்கினால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன் மத மோதல்களும் ஏற்படும், அது 2 நாட்டு மக்களிடையேயான சுமுக உறவைப் பாதிக்கும். அதனால் புத்தர் சிலைகளை உடனே அகற்ற வேண்டும் என இந்தியா, இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்: இந்நிலையில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், மாவட்ட ஆட்சியர் சிவபாலசுந்தரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டுவிட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகத்துக்கும், கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x