Published : 26 Apr 2023 04:26 AM
Last Updated : 26 Apr 2023 04:26 AM

பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதம் ஆகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேர்வு முடிவு எப்போது என்று மே 7-ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை 8.30 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தேர்வு முடிவு வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, நீட் தேர்வுக்கு பிறகு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறும்போது, ‘‘நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்துமுதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மனரீதியிலான அழுத்தத்தை தராதவாறு தேர்வு முடிவு வெளியிடப்படும். எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியாகும் என்பது மே 7-ம் தேதி மாலை அறிவிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x