Published : 14 Sep 2017 09:24 AM
Last Updated : 14 Sep 2017 09:24 AM

சிறையில் சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்த விவகாரம்: முதல்வருக்கு எதிரான மனு முடித்துவைப்பு - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டி.ஆணழகன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பெங்களூர் சிறையில் உள்ள வி.கே.சசிகலாவை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜு, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகியோர் கடந்த பிப்.28-ம் தேதி நேரில் சந்தித்து பேசினர். அரசின் செயல்பாடுகள் குறித்து சசிகலாவுடன் விவாதித்ததாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது, அமைச்சர்கள் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிய செயலாகும். இதனால் 4 அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிசாமி ஆகியோரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் முதல்வர் பழனிசாமி, 4 அமைச்சர்களின் பதில் மனுவை மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்தார்.

முதல்வரின் பதில் மனுவில், ‘சசிகலாவின் சொல்படியே தமிழக அரசு செயல்படுகிறது என அதிமுக செய்தி தொடர்பாளர் கவுரி சங்கர் தெரிவித்த கருத்தை மறுக்காதது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியது ஆகாது. அவரை சந்தித்த அமைச்சர்களும் அரசின் செயல்பாடு குறித்து சசிகலாவிடம் விவாதித்ததாக பகிரங்கமாக தெரிவித்ததற்கு ஆதாரம் கிடையாது. நானும், அமைச்சர்களும் எந்த வகையிலும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோரும் நட்புரீதியாக சசிகலாவை சிறையில் சந்தித்து உடல் நலன் விசாரித்ததாக பதில் மனுவில் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என கூறி மனுவை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x