Published : 29 Sep 2017 09:07 AM
Last Updated : 29 Sep 2017 09:07 AM
திராவிடர் கழகம், திராவிடர் மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கு பலியான அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அனிதா உருவப் படத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘நீட் தேர்வை எதிர்த்து, சட்ட ரீதியான போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். நீட் விவகாரத்தில் அனிதா விதை ஆகி இருக்கிறார். அதிலிருந்து அடுத்த தலைமுறைக்கான கனிகள் உருவாக இருக்கிறது’’ என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, ‘‘நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்’’ என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘சாதாரண மக்கள் உயர்கல்வி பெறக்கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம்’’ என்றார்
நிகழ்ச்சியில், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் முன்னாள் எம்பி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், உ.தனியரசு எம்எல்ஏ, அனிதாவின் சகோதரர் ச.ஆ.மணிரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT