Published : 18 Sep 2017 10:52 AM
Last Updated : 18 Sep 2017 10:52 AM

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா: துணை முதல்வர், தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியாரின் 139-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையில் தமிழக அரசு சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பெரியாரின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க. பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அதேபோல அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பெரியார் உருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.

சென்னை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு திமுக சார்பில் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் சத்தியமூர்த்தி பவனில் உள்ள அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல பெரியார் நினைவிடம் அமைந்துள்ள வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் விஜயகாந்த், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பெரியார் பிறந்தநாளை கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x