Published : 22 Apr 2023 01:36 PM
Last Updated : 22 Apr 2023 01:36 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்யப்பட்டபோது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரித்தனர். அவர்களுக்கு தினசரி 550 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அதற்கான உரிய கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. நட்சத்திர பேச்சாளர் அனுமதி பெறும் கட்சிகளை சார்ந்த வேட்பாளருக்கே வாக்கு சேகரிக்க வேண்டுமென்ற விதிகள் மீறப்பட்டுள்ளது. முதல்வர் மு.கஸ்டாலின் முதல் அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தது விதிமீறல்.

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியது விதிமீறல். தேர்தல் ஆணையத்திடம் முறையான் அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 கொட்டகைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு நாள் வரை தினமும் வாக்காளர்கள் தங்கவைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டது.

வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இது தொடர்பாக தனியார் சேனலில் செய்தி வெளியிடப்பட்டதால், அந்த செய்தியை சேகரித்த செய்தியாளர் மீது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்ந்துள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் அவற்றை தடுக்காமல் நடத்தப்பட்ட தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x