Published : 24 Jul 2014 09:57 AM
Last Updated : 24 Jul 2014 09:57 AM

வங்கிக் கடன் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியல்: இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியீடு

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் பெயரை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

சம்மேளனத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.மகேஸ்வரன் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் பட்டியலை கோவையில் புதன்கிழமை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2014, மார்ச் மாதம் வரை பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத (வராக்கடன்) பணம் ரூ. 63 ஆயிரத்து 591 கோடியாக உயர்ந்துள்ளது. இத்தொகை ஏழை மக்களின் கல்வி, சுகாதாரம், சமூக நோக்கத்துக்காகக் கடனாக அளிக்கப்படவில்லை. பெரும் முதலாளிகளுக்கும், அவர்கள் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களின் பெயரிலும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோரை சரி செய்து இவ்வளவு தொகையை பெரும் நிறுவனங்கள் கட்டாமல் ஏமாற்றியுள்ளன. அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. மாறாக, அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தனியார் வங்கிகளின் லாபத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுத்துறை வங்கிகளின் பல கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பணிகள் அவுட்சோர்சிங் முறைக்கு மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இன்று பொதுத்துறை வங்கிகளைப் பாதிக்கின்ற மிகப்பெரிய நோயாக வராக்கடன் உள்ளது. ஒவ்வொரு பொதுத் துறை வங்கியும் ஈட்டும் நிகர லாபத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வராக் கடனுக்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது. இது பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடும் செயல். அரசியல் செல்வாக்குமிக்க பெரும் முதலாளிகள்தான் இதற்கு காரணம்.

பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று ஏமாற்றி வரும் பெரும் முதலாளிகள், அவர்கள் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. எனவேதான் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வராக்கடன் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு, வங்களில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத பெரும் முதலாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு, நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. அப்போதுதான் பொதுத்துறை வங்கிகள் பாதுகாக்கப்படும் என்றார்.

300 நிறுவனங்கள்

வராக்கடன் பட்டியலில் மொத்தம் 1,129 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள், 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியிடம் இருந்து கோவை டைட்டல் பார்க் நிறுவனம் ரூ.121.50 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை. திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம், 5 பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து நிறுவனத்தின் பெயரை மாற்றி மாற்றிக் கொடுத்து சுமார் ரூ.600 கோடிக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை.

இதேபோல், சூர்யா குழும நிறுவனம் 14 பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை.

இவ்வாறாக, சுமார் 300 நிறுவனங்கள் வெவ்வேறு பொதுத்துறை வங்களிடம் இருந்து கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x