Published : 21 Apr 2023 07:40 PM
Last Updated : 21 Apr 2023 07:40 PM

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு புதிதாக விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்: ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்

சென்னை: சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக நடந்தது.

அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குரு கிருஷ்ணகுமார், "கட்சியின் திருத்த விதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சியின் சட்ட திட்ட விதிகளில் குறிப்பிடவில்லை. 2021 டிசம்பரில் நடந்த செயற்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் ஏதும் 2022 ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. மாறாக புதிய நிர்வாகிகளின் தேர்தல், நியமனத்தை பதிவு செய்து, பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் வைக்கப்பட இருந்தன. அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்?.

இதைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது. 75 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனைகள் முன்பிருந்தே பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். அதற்கு, இல்லை என பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தற்போது தான் இந்த நிபந்தனைகள், சொந்த நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டது. கட்சியில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இல்லை எனும்போது எதேனும் உயர்ந்த பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்தினால், யாருக்கு ஆதரவு இல்லை என்பது தெரியும்" என்று வாதிட்டார்.

பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x