புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப் பூண்டின் அறுவடை தொடக்கம்: ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனை

புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப் பூண்டின் அறுவடை தொடக்கம்: ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனை
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் மலைப் பூண்டு அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 எக்டேரில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

பயிரிட்ட 120 நாட்களில் மலைப் பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சீதோஷ்ண நிலை மாற்றம், மழையால் விளைச்சல் 70 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பச்சை பூண்டு (அறுவடை செய்த) ரூ.70-க்கும், புகை மூட்டம் செய்யப்பட்ட பூண்டு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. விளைச்சல் குறைந்தாலும், போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இது குறித்து மன்னவனூர் விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு மலைப் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. புகை மூட்டம் செய்து பதப்படுத்திய பூண்டு ஒரு கிலோ ரூ.450 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுபடியாகும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in