Published : 18 Apr 2023 04:53 AM
Last Updated : 18 Apr 2023 04:53 AM

18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடியில் ஸ்மார்ட் போன்கள்: சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ரூ.17.53 கோடியில், 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அவற்றுக்குப் பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டத்தால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், இந்ததிட்டத்தால் படிப்பை இடையில் நிறுத்திய அரசுப் பள்ளி மாணவிகள் 11,682 பேர், தங்களது மேற்படிப்பைத் தொடர்ந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்துபெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தில் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 4 மாவட்டங்களில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தால், மகளிருக்கு மாதம்ரூ.700 முதல் ரூ.1,000 வரை பயணச்செலவு மீதமாகிறது. அதேபோல, உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

> தமிழகத்தில் 17,312 சத்துணவு மையங்களுக்கு, ரூ.25.70 கோடியில்புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.

> சத்துணவு திட்டம், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், கண்காணிக்கவும் ரூ.50 லட்சம் செலவில்இணையதள முகப்பு மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்படும்.

> சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் உயர் ரகதையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

> பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்கவும், கல்வியில் பாலின வேறுபாட்டைக் களைந்து, பெண்குழந்தைகள் கல்வி பெறுவதைஊக்குவிக்கவும் கொண்டுவரப்பட்ட முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாகிவிட்டன. இந்த திட்டத்தில் சில தகுதிகளை தளர்த்தினால் அதிகம் பேர் பயன்பெறுவர். அதற்கேற்பு இத்திட்டம் மறுசீரமைக்கப்படும்.

> ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்து, நிகழ்நேர பதிவு மேற்கொள்ள வசதியாக 18,573 அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடி செலவில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.

> குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில், 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளர்ச்சிக் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்

> நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில், முன்பருவக் கல்வி பயிலும் 9,088 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர், தொப்பி, சாக்ஸ் வழங்கப்படும்.

> சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.

> சென்னை, திருச்சி, கோவையில் ரூ.1.14 கோடி செலவில், குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x