Published : 12 Sep 2017 05:28 PM
Last Updated : 12 Sep 2017 05:28 PM

ஈபிஎஸ் ஆட்சியை அகற்ற 19 எம்எல்ஏக்களும் உறுதியாக இருக்கிறோம்: மாரியப்பன் கென்னடி பேட்டி

பொதுக்குழு முடிந்த நிலையில் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள குடகு பகுதி விடுதியை போலீஸார் முற்றுகையிட்டனர். இது பற்றி அந்த விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியிடம் கேட்டபோது 19 பேரும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடி, ஓபிஎஸ்ஸை அகற்ற வேண்டும் எனபது எங்கள் குறிக்கோள்.  இவ்வளவு தூரம் துரோகம் செய்பவர்கள் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள், தேவைப்பட்டால் இந்த அரசை வீழ்த்த நடவடிக்கை எடுப்போம், தேர்தலைச் சந்தித்து ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தவுடன் கோவையிலிருந்து தமிழக போலீஸார் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களை விசாரிப்பதற்காக வந்தனர். விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்துடன்தான் தங்கியுள்ளார்களா என்பதை விசாரிக்க வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து குடகு பகுதியில் விடுதியில் தங்கியுள்ள மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியிடம் தி இந்து தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

நீங்கள் குடகு விடுதியில் தான் தங்கியுள்ளீர்களா?

ஆமாம். விடுதியில் தான் இருக்கிறேன்

உங்களுடன் எத்தனை எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்?

19 பேர் தங்கியுள்ளோம். வெற்றிவேல் சென்னையில் இருக்கிறார்.

உங்களை விசாரிக்க தமிழக போலீஸார் வந்ததாக தகவல் வந்ததே?

போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.  நீங்கள் உங்கள் விருப்பப்படித்தான் இங்கு இருக்கிறீர்களா? என்று விசாரணை நடத்தினர்.

தினகரன் நேற்று இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை அகற்றும் முடிவில் இருக்கிறோம் என்று பேட்டி அளித்தார். அந்த முடிவில் 19 எம்.எல்.ஏக்களும் உறுதியாக இருக்கிறார்களா?

அனைவரும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு மாரியப்பன் கென்னடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x