Published : 17 Apr 2023 07:54 PM
Last Updated : 17 Apr 2023 07:54 PM

ஓர் ஆண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி: ராதாகிருஷ்ணன் தகவல்

மதுரையில் ஆய்வு செய்த கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்  

மதுரை: "ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும்" என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் இன்று (ஏப்.17) கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ராதாகிருஷ்ணன், பாண்டியன் சில்க்ஸ் மற்றும் சாரீஸ் புதிய விற்பனை நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலைகள் போன்றவை பொதுமக்கள் நலன் சார்ந்து மிக நேரடியாக செயல்படக்கூடிய துறையாகும். தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும்.

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத்தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு மொத்தம் ரூ. 64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 35,941 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளுகம், 9,923 பகுதிநேரக் கடைகளும் அடங்கும். அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் விலைக் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 5,784 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் ரேஷன் கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிதாக கட்டப்படும் அனைத்து ரேஷன் கடைகளும் கழிப்பறைகளுடன் கட்டப்படுகின்றன. ஒராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறிவிப்பு உள்ளது. இது தொடர்பாக பணியாளர்களின் நலனை கருத்திற்கொண்டு நிர்வாக ரீதியான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளின் பரிவர்த்தனைகள், யூபிஐ, போன் பேங்கிங் போன்ற பரிவர்த்தனைகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் பல்நோக்கு சேவை மையங்களாக மேம்படுத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய உள்ளோம். கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x