Published : 17 Apr 2023 06:23 AM
Last Updated : 17 Apr 2023 06:23 AM

மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு குளியல் தொட்டி உற்சாகத்துடன் துள்ளிக் குதித்த பார்வதி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை புத்துணர்வு பெறும் வகையில், ரூ.23.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார்.

மீனாட்சி அம்மன் கோயில் யானை `பார்வதி'க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது சிறந்த கால்நடை மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தாய்லாந்து நாட்டில் இருந்து யானைக்கான சிறப்பு மருத்துவக் குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர். அப்போது யானையின் மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்வுடன் இருக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி கோயில் வளாகத்தில் யானை நீந்தி குளிக்கும் வகையில் குளியல் தொட்டி கட்டுவதற்கு ரூ.23.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கட்டி முடிக்கப்பட்ட குளியல் தொட்டியை நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் யானை `பார்வதி'யை பாகன்கள் அழைத்து வந்தனர். தொட்டியில் தண்ணீரைக் கண்டதும் யானை துள்ளிக்குதித்து விளையாடியது.

பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருக்கும்போதே, பல முயற்சிகள் எடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். தற்போது முதல்வர், துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானையின் கண்ணில் உள்ள விழித்திரையில் ஏற்பட்ட நோய்த் தொற்றை சரி செய்யும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. யானையின் மன அழுத்தத்தைப்போக்கவே குளியல் தொட்டி கட்டப்பட்டது. அதில் யானை விளையாடி குளிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, இந்துசமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் ஆ.அருணாசலம் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x