Published : 16 Apr 2023 04:11 AM
Last Updated : 16 Apr 2023 04:11 AM

ஸ்டாலின் மீது 20-ம் தேதி சிபிஐயில் புகார் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுவரும் 20-ம் தேதி டெல்லி சிபிஐயில் கூடுதல் ஆதாரங்களுடன் புகார் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பணிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பெங்களூரு சென்றார்.

அப்போது, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம், பிராந்தியமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். எனவே, சிஏபிஎஃப் தேர்வை தமிழில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கும் என எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருந்தேன். நாங்கள் தொலைபேசி வாயிலாக பேசினாலே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

திமுகவைப் பொறுத்தவரை அனைத்தையுமே ஆர்ப்பாட் டம், போராட்டமாகத்தான் பார்க்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்திருக்கிற முடிவு என்பது, மத்திய அரசு பிராந்திய மொழிகள் பக்கம்தான் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றது தொடர்பான கூடுதல் ஆதாரங்களுடன் 20-ம் தேதி டெல்லி சென்று சிபிஐயில் புகார் அளிக்க இருக்கிறேன். என் மீது திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் இருக்கிறது. அதனால் எனக்கு பயம் இல்லை.

நான் கூறியிருக்கும் எந்த குற்றச்சாட்டையும் திமுகவினர் மறுக்கவில்லை. நான் வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இன்னும் பல ஆதாரங்களை நான் வெளியிடுவேன். நீதிமன்றத்தில் இன்னும் அதிகப்படியான ஆதாரங்களை அளிக்கத்தான் போகிறோம்.

‘என் மண் என் மக்கள்...’ இணையதளம் தொடங்கி 24 மணி நேரத்தில் ஊழலுக்கு எதிராக கட்சி சாராத 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துவிடுவார்கள். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x