இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் சிங்கார சென்னை அட்டை அறிமுகம்

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சிங்கார சென்னை அட்டை
மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சிங்கார சென்னை அட்டை
Updated on
2 min read

சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 1 (Phase 1) மற்றும் கட்டம் 1 நீட்டிப்பில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியுடன் (வங்கி பங்குதாரர்) இணைந்து சிங்கார சென்னை அட்டையை (National Common Mobility Card-தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது, சிங்கார சென்னை அட்டைகளை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ மும்பை லைன் 2ஏ&7, பெங்களூரு மெட்ரோ, டெல்லி மெட்ரோ விமான நிலையம், கான்பூர் மெட்ரோ, மும்பை மற்றும் கோவாவில் கடம்பா போக்குவரத்து பேருந்துகள் ஆகிய இடங்களில் ரூபே தேசிய பொது இயக்க அட்டைகளை ஏற்கும் இந்தியாவின் அனைத்து மெட்ரோகளிலும் பயன்படுத்த முடியும்.

எதிர்காலத்தில், பேருந்து புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபே தொழில்நுட்பம் இதன் அடிப்படையாகும்.

இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2000 ரூபாய் சேமிக்க முடியும். புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைக்கான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும் ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சிங்கார சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள்:

  • இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தலாம்.
  • குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை.

பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், சிங்கார சென்னை அட்டையை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), அர்ஜுனன் (திட்டம்), பிரசன்னகுமார் ஆச்சார்யா (திட்டம்), CUMTA நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, NPCI, Paycraft மற்றும் Ford ஆகியவற்றின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

முதற்கட்டமாக, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் (கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி) தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும். தேசிய பொது இயக்க அட்டைகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பு கேட்களிலும் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in