Published : 14 Apr 2023 05:20 AM
Last Updated : 14 Apr 2023 05:20 AM

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம் - சுயநினைவை இழந்த மருத்துவ மாணவர்

சபீக் அகமது

கிருஷ்ணகிரி: பிறந்த நாள் கொண்டாட்ட விளையாட்டு விபரீதமாகி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சுயநினைவை இழந்தார். இதுதொடர்பாக 4 மாணவர்கள் கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சபீக் அகமது. இவர் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கி கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10-ம் தேதி சபீக் அகமது தனது பிறந்த நாள் விழாவை கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது, சக மாணவர்கள் விளையாட்டாக சபீக் அகமதுவை கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக அவர் மீது விழுந்து விளையாடினர்.

இதில், சபீக் அகமது திடீரென மயக்கம் அடைந்தார். நீண்ட நேரமாகியும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. அச்சமடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கழுத்துப் பகுதியிலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய நரம்பில் சபீக் அகமதுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதால். அவர் சுயநினைவை இழந்துள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில் 4 மாணவர்களை 3 மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து கல்லூரி டீன் ராஜிஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி தலைமையில் குருபரப்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக புகார் எதுவும் பெறப்படவில்லை. வழக்குபதிவும் செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x