Published : 13 Apr 2023 04:25 AM
Last Updated : 13 Apr 2023 04:25 AM

அதிமுகவில் எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஓபிஎஸ் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை நிராகரித்து தனி நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ், பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு, இந்த வழக்கில் வரும் ஏப்.20, 21-ம் தேதிகளில் விசாரித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்.16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர், வழக்கறிஞர் ராஜலட்சுமி: கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிடுவது, அதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்வது, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்.16-ம் தேதி நடக்க உள்ளது. ஈரோடு இடைத்
தேர்தலின்போது எங்களுடன் கலந்துபேசுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. இந்த செயற்குழு கூட்டத்துக்கும் எங்களுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை.

இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளும் எங்களுக்கு ஆதரவாகவே
உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலையும், கர்நாடகா தேர்தலையும் சம்பந்தப்படுத்த முடியாது.

அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஈரோடு இடைத்தேர்தலின்போது அப்படி ஓர் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஓபிஎஸ்ஸுக்கு 4 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். இபிஎஸ் பக்கம் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: தற்போது ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் மட்டுமே ஆதரவாக இருக்கலாம். ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் வந்துவிட்டால் இந்த எண்ணிக்கை 400 ஆகிவிடும். ஏற்கெனவே இடைக்கால தடை கோரிய வழக்கு, தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டுவிட்டு அவசர கதியில் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்தனர். தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஏப்.16-ல் செயற்குழு என அறிவித்துள்ளனர். எதிர்மனுதாரர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அவசர கதியில் எடுக்கின்றனர்.

அதிமுக தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண்: அரசியலில் அன்றாட நடவடிக்கைகள் மிக முக்கியமானது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதால், கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதனால்தான் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது.

நீதிபதிகள்: அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்ஸின் நிலை என்ன?

ஓபிஎஸ் தரப்பு: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்துதான் சட்ட ரீதியாக போராடி வருகிறோம். ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், மாணவப் பருவத்திலேயே அதிமுகவில் இருந்தவர். இவ்வாறு வாதம் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ஏப்.16-ல் நடக்க உள்ள செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த மேல்
முறையீட்டு வழக்கு ஏப்.20, 21-ல் விசாரிக்கப்படும். அதே நேரம், அதிமுகவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’’ என்று கூறி
விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x