Published : 11 Apr 2023 11:26 AM
Last Updated : 11 Apr 2023 11:26 AM

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை வரும் ஜூன் மாதம் திறக்கப்படும்: அமைச்சர் எ.வ வேலு

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் காரணமாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மே 15ம் தேதிக்குள் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுபெறும்.

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடத்தினையொட்டி இந்த மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் இந்த மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும். கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் முடிவெடுப்பார்கள்" என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x