Published : 10 Apr 2023 04:17 PM
Last Updated : 10 Apr 2023 04:17 PM

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி | கோப்புப் படம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, அக்.19-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டார். அதற்குஉடனடியாக பதில் அளிக்கப்பட்டது. பின்னர், 4 மாதங்கள் கழித்து, அந்த சட்ட மசோதாவை, தமிழகஅரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் திருப்பியனுப்பினார்.

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மசோதா, தமிழக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டது. அந்த மசோதா மற்றும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் என அனைத்தும் தமிழக சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலையில், மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது இந்த மசோதா குறித்து விவாதித்துள்ளதாகக் கூறப்பட்டது. அவர் சென்னை திரும்பியதும் மசோதா குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அவரது முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில், சில தினங்களுக்கு முன் ஓரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” என்று பேசினார். அதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. | வாசிக்க > மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம்: தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அம்சம் என்ன? - ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தியே இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விளையாட்டை நேரில் விளையாடும்போது, அனைத்துச் சூழல்களும் விளையாடுபவருக்குத் தெரியும். ஆனால், ஆன்லைனில் யாரையும் எளிதாக ஏமாற்றி, பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x