Published : 10 Apr 2023 06:19 AM
Last Updated : 10 Apr 2023 06:19 AM

வீடுகளில் பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: வீடுகளில் பொருத்தப்பட உள்ளஸ்மார்ட் மீட்டர்களுக்கு நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 2 மாதங்களுக்குஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதற்காக, மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மீட்டரில் பதிவான மின் பயன்பாட்டு அளவை கணக்கு எடுக்கின்றனர். சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக,ஸ்மார்ட் மீட்டரில் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தி மின்வாரிய அலுவலக சர்வருடன்இணைக்கப்படும்.

கணக்கெடுக்கும் தேதி கணினியில் மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதிவந்ததும் தானாகவே கணக்கெடுத்து நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு கட்டணம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். சோதனை முயற்சியாக சென்னை தி.நகரில் 1.42 லட்சம்மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு மின்கணக்கு எடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஸ்மார்ட் மீட்டர்பொருத்துவது, தகவல் பரிமாற்றம்,ஒருங்கிணைப்பு, பராமரிப்பது ஆகிய பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஒரு மீட்டரை பொருத்த ரூ.6 ஆயிரம் வரை செலவிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதைவிட குறைந்த செலவில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இதற்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இவ்வாறு மின்வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x