Published : 06 Apr 2023 05:59 PM
Last Updated : 06 Apr 2023 05:59 PM

தி.மலை - கீழ்நமண்டியில் முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது

வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் தொடங்கிய முதல் கட்ட அகழாய்வு பணியை ஆட்சியர் பா.முருகேஷ் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை: தமிழக தொல்லியல் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நமண்டியில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் இன்று (ஏப்ரல் 6-ம் தேதி) தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவு சின்னங்கள் இருப்பது தெரியவந்தது.

தலா 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை விட்டம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டது. பல கல் வட்டங்கள் சேதமடைந்திருந்தது. கல்வட்டங்களில் இருந்து ஈமப்பேழையின் எச்சங்கள், இரும்புக் கருவிகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், கீழ்நமண்டியில் அகழாய்வு பணியை மேற்கொண்டு, தமிழர்களின் நாகரிகத்தை உலகறிய செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு பணி இன்று (ஏப்ரல் 6-ம் தேதி) தொடங்கியது. இப்பணியை, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி கீழ்நமண்டியில் நடைபெற்ற அகழாய்வு பணியை ஆட்சியர் பா.முருகேஷ் பார்வையிட்டார். அப்போது, கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ், தெள்ளார் ஒன்றியக் குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஈ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும்போது, ''55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை முதல் கட்ட அகழாய்வு பணி நடைபெறும். குத்துக்கல் மற்றும் மெருகூட்ட பயன்படுத்தப்பட்ட பள்ளங்களும் காணப்படுகின்றன. இரும்பு காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகளில் குறியீடு அடையாளம் காணப்படுகிறது. புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்பு காலங்களை கண்டறிய அகழாய்வு வழி வகுக்கும். மேலும் இந்த பகுதியின் பண்பாட்டு கால வரிசையை புரிந்து கொள்ள உதவும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x