Published : 06 Apr 2023 12:08 PM
Last Updated : 06 Apr 2023 12:08 PM

மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சென்னை மூவரசம்பட்டு கோயில் குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தமிழக பேரவையில் இன்று (ஏப்.6) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அதில், "இதயம் இருப்பவர்கள் அனைவரும் இறக்கப்படும் துயர சம்பவம் இது. இது கோயிலின் குளம் இல்லை.பஞ்சாயத்து குளம். கடந்த 4 ஆண்டுகளாகத்தான் இந்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்தக் கோயில் ஒரு டிரஸ்ட்டின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்தார்கள். உடனடியாக அந்தக் கோயிலுக்கு தர்க்கார் நியமனம் செய்யப்பட்டார்.

டிரஸ்ட் சார்பில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் இந்தச் சம்பவத்தில் விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பறிபோய் உள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை. இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இது போன்ற நிகழ்வுகளை நடத்தும் போது துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.6) செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் தீர்த்தவாரியின்போது குளத்தில் 5 பேர் இறந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x