Published : 06 Apr 2023 11:55 AM
Last Updated : 06 Apr 2023 11:55 AM

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் 

சென்னையில் தேர்வு எழுதிய மாணவர்கள்

சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (ஏப்ரல் 6) தொடங்கியது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் நேற்றுடன் (ஏப்.5) நிறைவு பெற்றது.

இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (ஏப்.6) தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x