Published : 06 Sep 2017 05:17 PM
Last Updated : 06 Sep 2017 05:17 PM

எனக்கு பதவி முக்கியமில்லை: தமிமுன் அன்சாரி

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசுக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு, கொள்கை தான் முக்கியம் பதவி முக்கியம் அல்ல, மாறி வாக்களிப்பதால் பதவி போனால் அதற்காகக் கவலைப்படமாட்டேன் என்று மனித நேய ஜனநாயக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

நேற்று நடந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு அறுதி பெரும்பான்மையுடன் உள்ளது. 111 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று தெரிவித்த அவர் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் எங்களுக்கே ஆதரவு என்று தெரிவித்தார்.

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரியிடம் கேட்ட போது அவர் மறுத்தார். ஒருவேலை வாக்கெடுப்பு நடந்தால் ஆதரித்து வாக்களிக்காவிட்டால் பதவி பறிபோகுமே என்று கேட்டபோது கொள்கை தான் முக்கியம் என்று பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி விபரம் வருமாறு:

நேற்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரும் எடப்பாடி அரசுக்கு ஆதரவு என்று நாங்கள் எந்த ஆதரவும் கொடுக்கவில்லை, காரணம் நீட் தேர்வில் மத்திய அரசிடம் சரணடைந்து கிடக்கிறார்கள், எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டத்தை பயனபடுத்துகிறார்கள், மே.17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது இவர்கள் கொடுக்கும் நெருக்கடிகள் எங்களுக்கு வேதனையை தருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் நாங்கள் இவர்களை ஆதரிக்க விரும்பவில்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழ்நிலை வந்தால் தமிமுன் அன்சாரியின் நிலை என்ன?

எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்படுவேன்.

ஒருவேளை மாற்றி வாக்களித்தால் உங்கள் எம்.எல்.ஏ பதவி பறி போகுமே?

அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கொள்கைதான் முக்கியம். மனித நேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். நீங்கள் கேட்டீர்கள் அல்லவா , ஒருவேளை எதிர்த்து வாக்களித்தால் பதவி போகுமே என்று? அரசியலில் கொள்கைகள் தான் முக்கியம் இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.

முன்னதாக அதிமுக அணியில் 3 எம்.எல்.ஏ.,க்களும் (தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்) ஓரணியாக இருந்தனர். தற்போது மூவரும் மூன்று விதமான முடிவுகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x