Last Updated : 20 Sep, 2017 12:51 PM

 

Published : 20 Sep 2017 12:51 PM
Last Updated : 20 Sep 2017 12:51 PM

மருத்துவ கல்லூரி இயக்குனராக ரேவதி கயிலை ராஜனை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக ரேவதி கயிலைராஜனை உடனடியாக நியமனம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அவர் தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணிபுரிந்து வருகிறார்.

தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குனராக டாக்டர் விமலா (தற்போது எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார்) 18.3.2016-ல் நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து ரேவதி கயிலைராஜன் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், மருத்துவக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்படும் ஒருவர் 2 ஆண்டுகள் டீனாக பணிபுரிந்திருக்க வேண்டும். பணி மூப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இருக்க வேண்டும். ஆனால் விமலா ஓய்வு பெற 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வதற்கு எனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே என்னை அந்தப் பதவியில் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இவரது வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி முக்கியமான பதவி. இப்பதவி வகிப்பதற்கு தகுதி, திறமை அவசியம். விமலா நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. இருப்பினும் விமலா ஓய்வு பெற்று சென்றுவிட்டார். இதனால் மனுதாரர் கேட்கும் நிவாரணம் வழங்க முடியாது.

தற்போது மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடம் காலியாக இருப்பதால் அந்த பதவிக்குத் தகுதியானவர்களை நியமனம் செய்ய வேண்டும். இந்த நியமனம் சட்டப்படியும் நடைபெறும் என நம்புகிறோம் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்குப் பிறகு மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டார்.

இவரது நியமனத்தை எதிர்த்து ரேவதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ''எட்வின்ஜோ தன்னை விட 7 ஆண்டுகள் பணிக்கு இளையவர். இதனால் மருத்துவக் கல்வி இயக்குனராக என்னை தான் நியமனம் செய்திருக்க வேண்டும்.

எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, என்னை அந்த பதவியில் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று பிறப்பித்த உத்தரவில், ''எட்வின்ஜோ நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. எனவே மருத்துவக் கல்வி இயக்குனராக ரேவதி கயிலைராஜனை உடனடியாக நியமித்து சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x