Published : 10 Sep 2017 04:09 PM
Last Updated : 10 Sep 2017 04:09 PM

தமிழக அமைச்சரின் பணமா? - ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்

பினாமி பெயரில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர், தாமாக முன்வந்து கறுப்பு பணம் கணக்கு காட்டும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார்.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது.

50 சதவீதம் அபராதம்

இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி டெபாசிட் செய்திருந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த நபர் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வரி மற்றும் அபராதத்தினைச் செலுத்த ஒப்புக் கொண்டது தெரிந்தது.

இந்தத் திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தமிழக அமைச்சர் ஒருவரின் பினாமியாக இருப்பது தெரிய வந்தது.

வருமான வரி நோட்டீஸ்

நாடு முழுவதும் 27 ஆயிரத்து 739 வங்கி கணக்குகளில் தலா இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுளளது. இவர்கள் அனைவருக்கும், தங்களின் வருமானம் குறித்த விவரங்களை அளிக்கும்படி, வருமான வரித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதில் 18 ஆயிரத்து 220 வங்கி கணக்குகளில் இருந்து வருமான வரித் துறைக்கு பதில் வந்துள்ளது. மற்றவர்கள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. பலர் அளித்துள்ள பதில்கள் வருமானவரித் துறையினரை திருப்திப்படுத்தவில்லை. இந்த வங்கி கணக்குகளில் 3 ஆயிரத்து 600 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிக தொகை டெபாசிட் செய்த 441 வங்கி கணக்குதாரர்கள் சரியான முகவரியைக் கொடுக்கவில்லை. அவர்களின் விவரங்களை சேகரிக்கவும் முடியவில்லை. இந்த 441 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.240 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிகமான தொகை டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் வணிகர்கள். வங்கி கணக்கில் டெபாசிட் செய்த தொகையினை, இவர்கள் தங்களது மொத்த வருவாய் என கணக்கு காண்பித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x