Published : 20 Sep 2017 11:33 AM
Last Updated : 20 Sep 2017 11:33 AM
கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் இன்ஸ்பெக்டர், 4 மாணவர்கள் காயமடைந்தனர். பதற்றம் நிலவியதால் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளத்தில் ரோகிணி பொறியியல் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று கல்லூரியில் விழா நடப்பதற்கா ஏற்பாடுகள் நடைபெற்றன.
மாணவர் மீது தாக்குதல்
நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் மதுஅருந்தியதாக கூறப்படுகிறது. கல்லூரியின் நல்லொழுக்க குழுவை சேர்ந்த இரு பேராசிரியர்கள் உட்பட 4 பேர், மது அருந்திய மாணவர்களைக் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கொல்லத்தை சேர்ந்த மாணவன் ஆனந்த்(18) தாக்கப்பட்டார். கீழே விழுந்த அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. சக மாணவர்கள் அங்கு கூடினர். கல்லூரி அறைகளின் கதவு, ஜன்னல், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கல்லூரி நிர்வாகம் சார்பில் அஞ்சுகிராமம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. முடிவில், 3 மாணவர்களை மட்டும் அதிரடிப்படை வாகனத்தில் ஏற்றி போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கல்லூரி முகப்பில் வாகனம் வந்தபோது, அங்கு திரண்டு நின்ற சக மாணவர்கள் போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கினர். இதில், இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மாணவர்கள் தரப்பில் 3 பேர் காயமடைந்தனர்.
போலீஸார் லேசாக தடியடி பிரயோகம் செய்து மாணவர்களைக் கலைத்தனர். அப்போது, கல்லூரி பேருந்து மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டன. 57 மாணவர்களை போலீஸார் பிடித்து சென்றனர். 20 மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.பதற்றம் நிலவியதால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸார் கூறும்போது, ‘‘கல்லூரி நிர்வாகத்துடன் பேசி, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT