Last Updated : 28 Mar, 2023 07:50 AM

 

Published : 28 Mar 2023 07:50 AM
Last Updated : 28 Mar 2023 07:50 AM

நாகர்கோவில் | தாய் இறந்தபோதும் மகளுக்கு நடந்த திருமணம்: உதவிக்கரம் நீட்டிய உறவினர்கள், மாவட்ட நிர்வாகம்

மணமகள் பொன் பிரதீஷாவுக்கு தாலி கட்டிய மணமகன்.(உள்படம்) மரணமடைந்த சாந்தி. 

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை அய்யாகோவில் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி (53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன் பிரதீஷா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், எள்ளுவிளையைச் சேர்ந்த சிவராஜனுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண முன்னேற்பாடு பணிகளை கவனிப்பதற்காக சண்முகவேல் வீட்டுக்கு நேற்று முன்தினம் உறவினர்கள் வந்திருந்தனர்.

அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக மாலை 3 மணியளவில் கிரைண்டரில் சாந்தி மாவு அரைத்தார். எதிர்பாராத விதமாக மின் கசிவுஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட சாந்தி உயிரிழந்தார். சாந்தியின் உடலைக் பிரேத பரி சோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதனிடையே உறவினர்கள் கூடி பேசி திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவது என முடிவெடுத்தனர்.

நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விதிமுறைப்படி மாலை 5 மணிக்கு பிறகுபிரேத பரிசோதனை நடத்துவதில்லை.

ஆட்சியர் பரிந்துரை: சாந்தியின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் போலீஸாரின் உதவியுடன், குமரி மாவட்ட ஆட்சியர் தரிடம் நிலைமையை எடுத்துக்கூறி உதவி கோரினர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவமனையில் இரவோடு இரவாக சாந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் அவரது உடலை நேரடியாக நாகர்கோவில் புளியடி தகன மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். பின்னர், நேற்று காலை திட்டமிட்டபடி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொன் பிரதீஷாவுக்கு எளிய முறையில் திருமணம் நடை பெற்றது. காலையில் மணப்பெண் வீட்டில் இருந்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது தாயார் இல்லாததால் கண்கலங்கிய அவரை உறவினர்கள் தேற்றினர்.

பின்னர் திருமணச் சடங்குகளைத் தொடர்ந்து பொன் பிரதீஷாவுக்கு மணமகன் சிவராஜன் தாலி கட்டினார். திருமணம் தடைபடக்கூடாது என்ற நோக்கத்துடன் உதவி செய்த மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவர்கள், போலீஸாருக்கு திருமண வீட்டார் நன்றி கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x