Last Updated : 27 Mar, 2023 02:19 PM

 

Published : 27 Mar 2023 02:19 PM
Last Updated : 27 Mar 2023 02:19 PM

ராகுல் காந்தி தகுதி நீக்கம் | புதுவை சட்டப்பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங்., வெளிநடப்பு

புதுச்சேரி: ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதம் முழுவதும் பேரவை குறிப்பிலிருந்து இறுதியில் நீக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இன்று பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் ராகுல் படத்துடன், ‘மன்னிப்பு கேட்கமாட்டார், உண்ணாவிரதம்’ என எழுதப்பட்டிருந்த பேனர்களோடு, கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை நுழைவுவாயிலில் மத்திய பாஜ அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் கறுப்பு சட்டையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்றனர். பேரவைக்குள் பேனர்கள் ஏதும் எடுத்து வரவில்லை. புதுவை சட்டப்பேரவையில் பூஜ்யநேரம் முடிந்தவுடன் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கும்படி பேரவைத்தலைவர் செல்வம் அறிவித்தார். அப்போது ராகுல் காந்தி பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் எழுந்து, ராகுல் பதவி நீக்கம் தொடர்பாக பேசினர். அதற்கு பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார், எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, வெங்கடேசன், அசோச்பாபு, ராமலிங்கம் ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன் ஆகியோர் எழுந்து பேசினர். இதனால் சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு கடுமையாக இரு தரப்பும் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராகுல் எம்.பி பதவி நீக்கத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர். அவர்களோடு திமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் எழுந்து, "தற்போது நடந்ததை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" என பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேரவைத் தலைவர் செல்வம், இந்த விவாதம் தொடர்பான பேச்சுகள் அனைத்தையும் பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x