Last Updated : 04 Sep, 2017 09:34 PM

 

Published : 04 Sep 2017 09:34 PM
Last Updated : 04 Sep 2017 09:34 PM

ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: தினகரனுடன் கூட்டம் நடத்த திட்டம்

தொகுதிக்கும், சென்னைக்கும் சென்றிருந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று மாலை முதல் புதுச்சேரிக்கு மீண்டும் திரும்ப தொடங்கினர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். சனிக்கிழமையன்று தினகரன் புதுச்சேரி வந்து சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். இந்நிலையில் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

தங்களுடைய தொகுதி பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ள அவர்களில் பலர் மாலை வரை திரும்பவில்லை. இன்றுக்குள் ரிசார்ட்டுக்கு திரும்புவார்கள் என கூறப்படுகிறது. ரிசார்ட்டில் ஏற்கனவே புக்கிங் செய்த 20 அறைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் காலி செய்யவில்லை என ரிசார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ரிசார்ட்டில் செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஏழுமலை, மாரியப்பன் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் இபிஎஸ் தரப்பு கூட்டும் எம்எல்ஏக்களுக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது . இதுதொடர்பாக புதுச்சேரியில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்டதற்கு, "இபிஎஸ் தரப்பு அழைப்பு தொடர்பான தகவல் டிடிவி தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முடிவுபடி செயல்படுவோம்" என்கின்றனர்.

திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: சென்னைக்கும், தொகுதிக்கும் சென்றிருந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று மாலை முதல் புதுச்சேரி ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கினர். எம்எல்ஏக்கள் தங்க தமிழ்செல்வன், கதிர்காமு, பாலசுப்ரமணியன், பார்த்திபன், கோதண்டபாணி உள்ளிட்டோர் மீண்டும் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். மீதமுள்ளோரும் புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

சென்னையில் செவ்வாயன்று கூட்டம்:

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டிடிவி ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், "தினகரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள், தொகுதிக்கு சென்றுள்ள எம்எல்ஏக்கள் சென்னை சென்று இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x