Published : 25 Sep 2017 09:32 AM
Last Updated : 25 Sep 2017 09:32 AM
உண்மையான அதிமுக நாங்கள்தான் என்பதை 15 நாட்களில் நிரூபிப்போம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியினர் அண்மையில் இணைந்தனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் இரு அணியினரும் இணையும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக 2 அணிகளாக செயல்பட்டது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் இணைந்து செயல்படுகிறோம். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம். இன்னும் 15 நாட்களில் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று நிரூபிப்போம். இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட எந்தத் தேர்தலாக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வெற்றிபெற்றதை விட அதிக இடங்களில் வெற்றிபெறுவோம்.
ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த வீடியோ ஆதாரம் இருந்தால் அவற்றை தினகரன் வெளியிடலாம். அதை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் பொதுக்குழுவில் இருக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT