Published : 22 Mar 2023 01:51 PM
Last Updated : 22 Mar 2023 01:51 PM

ஜூன் 3-ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு: திமுக தீர்மானம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமாகிய கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீமானத்தின் விவரம்:

தலைவர் கருணாநிதிக்கு வரும் ஜுன் 3-ம் தேதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும், கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

தலைவர் கருணாநிதி, அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3-ம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3,2023 தலைவர் கருணாநிதி நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.

துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம். கருணாநிதியை தாய் தமிழகத்திற்கு தந்த திருவாரூரில் ஜூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை- கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழகத்திற்கும், இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கருணாநிதி ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.

தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் ஜூன் 3 ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன்-3 வரை ஓராண்டு காலம் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு, தமிழின உரிமைகள், தமிழகத்தின் உயர்வு, திராவிடச் சுயமரியாதை, மாநில சுயாட்சி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் நலன். சமூக நீதி, பெண்ணுரிமை, இலக்கிய வளர்ச்சி, கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை கருணாநிதி ஆற்றி இருக்கிறார்கள். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே கருணாநிதி ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக கருணாநிதி வழித்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது." இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x