Published : 20 Mar 2023 12:49 PM
Last Updated : 20 Mar 2023 12:49 PM

ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய பன்னோக்குப் பிரிவு: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான திட்டங்களை தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். அதன் விவரம்:

மக்களைத் தேடி மருத்துவம்: தமிழக அரசின் முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், தொற்றா நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்க உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பலனடைவர்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு 993 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

* கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.

* ரூ.1,020 செலவில் மதுரை, கோவை, சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டுவரும் புதிய உயர் மருத்துவக் ககட்டங்களும் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

* திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* வட சென்னை மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டிடங்களும் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும்.

* மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரியான பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ. 40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

* பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x