Published : 20 Sep 2017 11:51 AM
Last Updated : 20 Sep 2017 11:51 AM
தினகரனும், ஸ்டாலினும் இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகிறது என்று தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் ஜனநாயகப் படுகொலை என்று திமுக தீர்மானம் போட்டுள்ளார்களே?
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து ஜனநாயகப் படுகொலை என்று கூற திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது. ஜனநாயகப் படுகொலைக்கு சொந்தக்காரர்களே திமுகவினரும், மு.க.ஸ்டாலினும் தான்.
சட்டப்பேரவையில் எங்களை பேசவே விடமாட்டார்கள், எங்கள் தலைவர்களை தாக்கிப் பேசுவது, எங்களை பேச விடாமல் வெளியேற்றுவது என ஜனநாயகப் படுகொலை செய்தவர்கள் திமுகவினர் தான். சட்டசபையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமானப்படுத்திவர்கள் இவர்கள். சட்டசபையில் ஜெயலலிதாவை தாக்கியவர்கள் இவர்கள்.
சட்டப்பேரவையில் எங்கள் தலைவர் எம்ஜிஆரை தாக்க முயன்றவர்கள். அன்று சபாநாயகராக இருந்த மதியழகனை இழுத்து கீழே தள்ளிவிட்டு விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக அமரவைத்து சட்டசபையை நடத்தியவர்கள் ஜனநாயகப் படுகொலை குறித்து பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.
எடப்பாடி ஆட்சியை மக்கள் வெறுப்பதாக தினகரனும், மு.க.ஸ்டாலினும் கூறிவருகிறார்களே?
தினகரனும், ஸ்டாலினும் இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகிறது என்று தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்பக் கூறுவதால் உண்மையாகி விடாது. இந்த ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி மக்களால் விரும்பப்படும் ஆட்சி.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும்?
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தீர்ப்பு பற்றி நான் எதுவும் கூற முடியாது.
அதிமுக ஆட்சி ஒரு மூழ்கிவரும் கப்பல் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே?
அவரது காங்கிரஸ் கட்சியே ஒரு மூழ்கிப்போன கப்பல், கிட்டத்தட்ட மூழ்கியே போய் விட்டது. அதை காப்பாற்ற யாரும் இல்லை, அதை முதலில் காப்பாற்றச் சொல்லுங்கள்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT