Last Updated : 18 Mar, 2023 09:47 AM

 

Published : 18 Mar 2023 09:47 AM
Last Updated : 18 Mar 2023 09:47 AM

ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: 100 ஏக்கர் பசுமைக்குடில்கள் சேதம்

மேற்கூரைகள் சேதமடைந்து உள்ள பசுமைக்குடில்

கிருஷ்ணகிரி : ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்று, ஆலங்கட்டியுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் காய்கறிகள், மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் சூறாவளி காற்றுடன் பெய்யும் மழையால் பசுமைக்குடில்கள் அதிகளவில் சேதமடைந்து வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 16) ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் பகுதிகளில் அதிவேக காற்று, ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால், பசுமைக்குடில்களின் மேற்கூரைகள் சேதமாகி உள்ளது. இதேபோல் காய்கறிகள், மலர் செடிகள் ஆலங்கட்டி மழையால், பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேதங்களை தவிர்க்க காப்பீடு செய்தும் பயன் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, "கோடைக்காலங்களில் சூறைக்காற்றுடன் மழை, ஏப்ரல் அல்லது மே முதல் வாரத்தில் பெய்யும். பருவநிலை மாற்றங்களால் தற்போது அதிவேக காற்றுடன், ஆலங்கட்டி மழை சூளகிரி, கெலமங்கலம், பாலூர், பேரிகை, மதகொண்டப்பள்ளி, குந்துமாரனப்பள்ளி, சங்கரப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இதனால் பசுமைக்குடில்களின் பிளாஸ்டிக் மேற்கூரைகள் காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் அதிகளவில் கிழிந்து சேதமானது. காய்கறி, மலர் செடிகளின் மீது ஆலங்கட்டிகள் விழுந்ததால், செடிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்கள் சேதமாகி உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் ஆலங்கட்டிகள் அதிகளவில் கூரைகள் மீது விழுந்து, அதன் பாரம் தாங்காமல் கிழிந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பசுமைக்குடில்கள் காப்பீடு செய்து வைத்திருந்தாலும், போதிய இழப்பீடு கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆய்வுகள் செய்து, இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அண்டைய மாநிலமான கர்நாடகாவில், பசுமைக்குடில் அமைக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் மேற்கூரைகளை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கி, ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதே போல், தமிழகத்திலும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலர், காய்கறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x