Published : 23 Sep 2017 08:52 AM
Last Updated : 23 Sep 2017 08:52 AM

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுவாமி சிலைகள் பறிமுதல்: வத்தலகுண்டில் ஒருவர் கைது

கேரளாவில் இருந்து கடத்தி வந்து வத்தலகுண்டில் பதுக்கி வைத்திருந்த சுவாமி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே உள்ள சேடபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(37). இவர் கேரளாவில் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்கள் கொடுத்த புத்தர், கிருஷ்ணர் சிலைகளை பாதுகாப்பாக வைக்க அவற்றை சாக்கு மூட்டையில் கட்டி சேடபட்டிக்கு கொண்டு வந்துள்ளார்.

சிலைகளின் மதிப்பு ரூ.2 கோடி என்று கூறி அவற்றை விற்க முயற்சி செய்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக முயற்சி செய்தும் சிலைகளை விற்க முடியவில்லை.

இந்நிலையில், போலீஸாருக்கு பயந்த ரஞ்சித், தனது நண்பர் சந்தனமூர்த்தியிடம் கொடுத்து, இது கலைப் பொருள் எனக் கூறி பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லியுள்ளார்.

இதை நம்பி சந்தனமூர்த்தியும் அவரது வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் சிலையை விற்க ரஞ்சித் ஏற்பாடுகள் செய்வதை அறிந்து இது கடத்தப்பட்ட சிலை என சந்தனமூர்த்திக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வத்தலகுண்டு போலீஸார் வழக்கு பதிந்து சிலைகளை கைப்பற்றி ரஞ்சித்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x