Published : 25 Sep 2017 11:05 AM
Last Updated : 25 Sep 2017 11:05 AM

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும்: வேளாண்மைத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்க தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயப் பயிர்கள் சாகுபடி மற்றும் வேளாண்மைத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தார்.

அப்போது, கொழுந்தலூர் அரசு விதைப் பண்ணை- விதை சுத்திகரிப்பு நிலையம், திருத்தணி அருகே உள்ள தாடூர், செறுக்கனூர் கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெள்ளாத்தூர் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கரும்பு நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நிலக்கடலை விதைப் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள தெளிப்பு நீர் பாசன திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதுமட்டுமல்லாமல், செறுக்கனூர் கிராமத்தில் பயறு வகை பயிர் விவசாயிகள் கூட்டுப் பண்ணைய திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, விவசாய ஆர்வலர் குழுக்கள் மத்தியில், வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பேசும்போது, “பயறு வகை பயிர் விவசாயிகள் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் உற்பத்தியை 2 மடங்கு உயர்த்தவும், சாகுபடி பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் ஒரு விவசாய உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இந்த கள ஆய்வை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, வேளாண்மை இணை இயக்குநர் ஞானவேல் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை இயக்குநர் தெரிவித்ததாவது:

திருத்தணி, ஆர்.கே.பேட்டை வட்டாரங்களில் காலியாக உள்ள தரிசு நிலங்களில் மானாவாரி பயிர் சாகுபடி திட்டத்தை 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேளாண்மைத் துறை அதிகாரி கள் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் விவசாயி களுக்கு உழவுப்பணிகள் முதல், உற்பத்திப் பொருளை விற்பனை செய்யும் நிலை வரை அரசு மானிய உதவிகள் கிடைக்கும்.

நடப்பு ராபி பருவம் மற்றும் சம்பா பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்து இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேளாண்மைத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x