Published : 11 Mar 2023 06:14 PM
Last Updated : 11 Mar 2023 06:14 PM

’‘எந்த சாதிப் பிரிவு?’ - அம்மா உணவகம் வருவோரிடம் 21 கேள்வியுடன் சென்னை மாநகராட்சி ஆய்வு: காரணம் என்ன?

அம்மா உணவகம் | கோப்புப் படம்

சென்னை: அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களிடம் ‘எந்த சாதிப் பிரிவு?’ என்பன உள்ளிட்ட 21 கேள்விகளைக் கேட்டு ஆய்வு ஒன்றை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு காலை நேரங்களில் இட்லி 1 ரூபாயக்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவங்களை நம்பி உள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சென்னையில் அம்மா உணவகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. அம்மா உணவகத்தை நடத்த ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவு ஆகிறது. ஆனால், 20 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. மீதம் 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால், வருவாய் மிகக் குறைவாக உள்ள அம்மா உணவகங்ளை மூடவேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில், அம்மா உணவகத்தை யார், யார் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய மாநகராட்சி சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. இதில், அம்மா உணவத்துக்கு சாப்பிட்ட வருபவர்களின் பெயர், சாதிப் பிரிவு , எந்த வேலை செய்பவர், தமிழகத்தை சார்ந்தவரா, வெளி மாநிலங்களை சார்ந்தவரா, எப்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துகின்றனர் உள்ளிட்ட 21 கேள்வி அடங்கிய ஆய்வை கடந்த நான்கு நாட்களாக மாநகராட்சி நடத்தி வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "அம்மா உணவகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் தயாரிக்கப்படும் இட்லி, சப்பாத்தி ஆகியவை, தெருவோர கடை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. உரிய பயனாளிகளுக்கு உணவுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. மற்றப்படி வேறு எந்தக் காரணமும் கிடையாது. 10 நாட்கள் வரை இந்த ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வு குறித்த அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x