Published : 23 Sep 2017 09:18 AM
Last Updated : 23 Sep 2017 09:18 AM

இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த 5 கம்பிகள் அகற்றம்: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சாதனை - ஒரே நேரத்தில் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்த டாக்டர்கள்

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி, லேப்ரோஸ்கோப்பி மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த 5 கம்பிகளை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வேலூரைச் சேர்ந்தவர் திலீப் (19). சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 6 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 4-ம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். அவரது வயிற்றுப் பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், வயிற்றுக்குள் 5 கம்பிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எண்டோஸ்கோப்பி கருவி மூலம் பார்த்தபோது, வயிற்றுக்குள் 3 கம்பிகள் இருந்தன. 2 கம்பிகளைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் குழுவினர் அவரது வயிற்றுப் பகுதியை சிடி ஸ்கேன் எடுத்தனர். அதில் 3 கம்பிகள் இரைப்பைக்குள்ளும், ஒரு கம்பி கல்லீரலிலும், மற்றொரு கம்பி சிறு குடல் - பெருகுடல் இடையே சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

இதனைத் தொடர்ந்து இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எல். ஆனந்த் தலைமையில் பொது அறுவை சிகிச்சைத் துறை டாக்டர் சாந்தி, மயக்க டாக்டர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் வயிற்றுப் பகுதியில் 4 சிறு துளைகளைப் போட்டு லேப்ரோஸ்கோப்பி கருவி உதவியுடன் கல்லீரலில் இருந்த கம்பியை எடுத்தனர். இதை யடுத்து சிறிய அறுவை சிகிச்சை செய்து எண்டோஸ்கோப்பி கருவி மூலமாக இரைப்பையில் இருந்த 3 கம்பிகள் மற்றும் சிறு குடல் - பெருகுடல் இடையே சிக்கியிருந்த கம்பியை வெற்றிகரமாக எடுத்தனர். சிகிச்சைக்குப் பின்னர், திலீப் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன், ஆர்எம்ஓ டாக்டர் ஆனந்த் பிரதாப் ஆகியோர் செய்தனர்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர் எல்.ஆனந்த் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் எண்டோஸ்கோப்பி, லேப்ரோஸ்கோப்பி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்த 5 கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பியும் 10 செமீ முதல் 15 செமீ வரை உள்ளது. இந்த சிகிச்சை மூன்றரை மணி நேரம் நடந்தது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் கம்பிகளை வாய்க்குள் போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு மனநலம் தொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு எல்.ஆனந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x