Published : 08 Mar 2023 08:36 PM
Last Updated : 08 Mar 2023 08:36 PM

விஜயகாந்த்துக்கு எதிரான அவதூறு வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, கடந்த 2016-ம் ஆண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னை எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த 2021 ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற சிறப்பு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களின் அனுமதியை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி நகர குற்றவியல் வழக்கறிஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, மாநில அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,"விஜயகாந்த் மீதான வழக்கு நிதி சம்பந்தப்பட்டது அல்ல. அவதூறு வழக்கு என்பதால் அதை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x