Published : 02 Sep 2017 06:23 PM
Last Updated : 02 Sep 2017 06:23 PM

தற்கொலை முயற்சி வேண்டாம்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி தரத் தயார்: சைதை துரைசாமி பேட்டி

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மருத்துவம் பயில முடியாத தகுதியான மாணவர்களுக்கு ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்) கல்விக்கு தனது நிறுவனத்தில் சேர்த்து இலவச பயிற்சி அளிக்கத் தயார் என்று மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

இது குறித்து மனிதநேய அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் கருத்தை கேட்டபோது அவர் கூறியதாவது:

மாணவி அனிதாவின் மரணம் நீட் தேர்வால் புறக்கணிக்கப்பட்டதால் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது இது குறித்த உங்கள் கருத்து?

முதலில் மாணவி அனிதாவின் மரணம் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர்த்திருக்கப்படவேண்டிய ஒன்று என்பது எனது ஆழ்ந்த கருத்து.

ஆளுமை என்பதுதான் அத்தனை இடத்திலும் நிறைந்திருக்கும். ஆளுமைதான் மிக முக்கியம். அனிதா மரணத்தில் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் அனிதா சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதிகாரியாக வரும் அளவிற்கு தகுதியானவர் என்று கருதுகிறேன். தன்னுடைய அறியாமையால் இந்த முடிவை அனிதா எடுத்துவிட்டார். நீட் என்ன நீட். ஐ.ஏ.எஸ் பெரிதா டாக்டர் பெரிதா?

அந்த தகுதியுள்ள மாணவி ஏன் இப்படி முடிவெடுக்க வேண்டும். இதை திசை திருப்ப வேண்டும். நீட் என்ன நீட், நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள், ஒரு கதவு மூடினால் அடுத்த கதவு திறக்கும்.

195 சதவிகிதம் பெற்ற அத்தனை பேரும் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் தகுதி பெற முடியும். தமிழ்நாடு தேர்வாணையத்தில் வெற்றி பெற முடியும். எதுக்கு மற்றதை பற்றி கவலைப்படுகிறீர்கள்.

உங்களுடைய பார்வை வேறு விதமாக உள்ளதே?

ஆமாம் வேறு விதமானது தான், மருத்துவபடிப்புக்கு தகுதி உள்ள மாணவனால் ஐ.ஏ.எஸ் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். அப்படி ஐ.ஏ.எஸ் போட்டித்தேர்வு என்பது அதிகாரத்தையும், சமூக அக்கறையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு. வேலை மட்டுமல்ல, அதிகாரம். மாற்றம், ஒரு சமூக மாற்றத்தை சிறந்த இளைஞர்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்கள் தகுதியான இடத்திற்கு வரும்போது தகுதியானவர்களுக்கு உதவ முடியும் என்கிறீர்களா?

ஆமாம், யாரால் இந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களோ, அவர்கள் அதிகாரத்தில் அமரும் போது இதை சுலபமாக மாற்ற முடியும். ஆகையால் நீட் தேர்வால் நிகழ்ந்த அனிதாவின் மரணம் என்பது மருத்துவ தேர்வால் புறக்கணிக்கப்பட்ட தகுதியான மாணவர்களுக்கு ஆட்சிப்பணி எனும் அற்புதமான கதவு திறந்துள்ளது அதை நோக்கி பயணம் செய்யுங்கள் என்கிறேன்.

அப்படி ஆட்சிப்பணி கல்வி பயில நினைக்கும் தகுதியான மருத்துவ மாணவர்களுக்கு நீங்கள் உதவத்தயாரா?

கண்டிப்பாக உதவுகிறேன் என்கிறேன். எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் பயிற்சி அளிக்கத்தயாராக இருக்கிறேன். அதுவும் இலவச பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறேன், என்பதை சேர்த்து எழுதுங்கள்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், மருத்துவக்கல்லூரியில் சேரத்தகுதியான மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அத்தனை உதவிகளையும் செய்யத்தயாராக இருக்கிறேன். ஒன்றை இழந்தால் இன்னொன்று கிடைக்கும்.

ஆயிரம், இரண்டாயிரம் மாணவர்கள் ஆனாலும் வரச்சொல்லுங்கள். பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறேன்.

பொதுவாக பெற்றோர்கள் டாக்டர், இன்ஜினியர் என்று தான் சொல்லி வளர்ப்பார்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எட்டாத தூரம் அல்லவா?

அதெல்லாம் மாறியாச்சு, அதை எல்லாம் உடைத்துவிட்டோம். பாதிக்கப்பட்ட தகுதியான மாணவர்கள் வரட்டும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். ஆகையால் நம்பிக்கையுடன் மாணவர்களை இறங்க சொல்லுங்கள், மாற்றுச்சிந்தனையை உருவாக்குங்கள்.

இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x