Published : 05 Mar 2023 04:23 AM
Last Updated : 05 Mar 2023 04:23 AM

வேலூரில் பாதுகாப்பு இல்லாமல் பாழடைந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருமண மண்டபம்

வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு பகுதியில் பாழடைந்து வரும் அரசு போக்குவரத்து கழக திருமண மண்டபம். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 1992-ம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டது.

இந்த மண்டபத்தால் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் மண்டபத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும், அரசு போக்குவரத்துக் கழக நிகழ்ச்சிகள் நடந்ததுடன் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் திருமண மண்டபம் வாடகைக்கு விடப்பட்டது.

மிகவும் விசாலமான அரங்கம், ஓய்வறைகள், வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மண்டபம் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மூடியே கிடக்கிறது. திருமண மண்டபத்தில் இருந்த மின்விசிறி, உணவு அருந்தும் பகுதியில் உள்ள இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன.

விருந்தினர் ஓய்வறைகள், கழிப்பறை கள் உள்ளிட்ட அனைத்தும் மோச மான நிலையில் இருப்பதாக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதே நேரம், பயன்பாட்டில் இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் திருமண மண்டப வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘‘பெரிய பரப்பளவில் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்த திருமண மண்டபம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை நிறைந்த பகுதியாக இருக்கிறது. மேலும், சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்களே சுத்தம் செய்து பராமரித்துக் கொள்கிறோம்’’ என சத்துவாச்சாரி பேஸ்-3 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘இந்த கட்டிடத்தை மீண்டும் பயன் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதிகாரிகள் பலர் பார்த்துச் சென்றதுடன் அமைதியாகி விட்டனர்’’ என்றனர்.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருமண மண்டபத்துக்கான இடம் அப்போதைய சத்துவாச்சாரி நகராட்சி வசமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டது. இதில், நகராட்சி, அரசு போக்குவரத்துக் கழகம் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பயன்படுத்தாமல் இருக்கிறது. அதை பராமரிக்கவும் முடியவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து, வேலூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்க துணைத்தலைவர் பரசுராமன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘அரசு போக்குவரத்துக் கழக நிதியில் கட்டப்பட்ட அந்த திருமண மண்டபத்தில் தொழிலாளர் களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

பொது மக்கள் எந்தநேரமும் வந்து செல்லவும் வசதியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மண்டபத்தை பயன் படுத்தாமல் மூடி வைத்துள்ளனர். வேலூர் மண்டல போக்குவரத்து கழகத்தில் உள்ள 4,500 தொழிலாளர்கள் பங்களிப்புடன் அதை சீர் செய்ய முடிவானது. இதற்காக ஒரு நபரிடம் இருந்து தலா ரூ.50 வீதம் வசூலிக்கப்பட்டது.

பிறகு அதையும் செய்யவில்லை. கேட்டால் பிரச்சினை இருப்பதாக மட்டும் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மீண்டும் வருவாய் கிடைக்கும் வகையில் அந்த திருமண மண்டபத்தை மாற்ற வேண்டும்’’ என்றார். திருமண மண்டபத்தில் இருந்த மின்விசிறி, உணவு அருந்தும் பகுதியில் உள்ள இருக்கை கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x