Last Updated : 03 Mar, 2023 10:12 PM

 

Published : 03 Mar 2023 10:12 PM
Last Updated : 03 Mar 2023 10:12 PM

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிய நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோவை: கோவையில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் என தவறான தகவல் பரவல் பரப்படுகிறது. கோவையில் அனைத்து மாநிலத்தினரும் பாதுகாப்புடன் வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டமானது தமிழக மக்களும், அனைத்து மாநிலங்களையும் சார்ந்த தொழிலாளர்களையும் கொண்ட தொழில் நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவரும் தொழில் சார்ந்த மாவட்டமாகும். இங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான இருப்பிடவசதி, உணவு, ஊதியம் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி அனைத்தும் வேலையளிப்பவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை சாதி, மொழி மற்றும் இனப் பிரச்சினைகள் ஏதும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம் மற்றும் பொது அமைதியினை பராமரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து வெளியேறி வருவதாகவும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

அவை அனைத்தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும். பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்கள் தீர்ப்பதற்காக கோவை மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்ட ‘புலம்பெயர் தொழிலாளர்கள் குறைகளைவு குழு’ அமைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பிறமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மற்றும் செல்போன் எண்களான 0422-2300970, 9498181213, 8190000100, 9443808277 மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்களான 9498181212, 7708100100 ஆகியவற்றிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், வெளி மாநில தொழிலாளிகளை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களும் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்து தங்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும்.

கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x